
“கீழடியில் பெயரளவில் ஆய்வு மேற்கொண்ட ஶ்ரீராமனை அழைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயல்…” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “கீழடியில் 102 இடங்களில் குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5,700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தப்பட்டுள்ளது.
இவ்வளவு ஆய்வுகள் நடத்தி ஆய்வறிக்கை சமர்பித்தால், அதிலுள்ள ஆதாரம் போதாது என்று இந்திய தொல்லியல் துறையினர் சொல்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே வருடத்தில் 10 குழியைத் தோண்டி சரஸ்வதி நதியை கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்வது வேதனையாக உள்ளது.

கீழடி அகழாய்வை மேற்கொண்டவர் சமர்பித்த ஆய்வறிக்கையை ஏற்றுக்கொள்ளாமல், கீழடியில் ஒன்றும் கிடைக்கவில்லை என எழுத்துப்பூர்வமாக தெரிவித்த ஶ்ரீராமனை அழைத்து, ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தற்போது சொல்வது தமிழர் நாகரிகத்தையும், வைகை நாகரிகத்தையும் நிராகரிப்பதற்கான அப்படமான சான்று.
கீழடியில் பெயரளவில் ஆய்வு மேற்கொண்ட ஶ்ரீ ராமனை அழைத்து ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஒன்றிய அரசின் திட்டமிட்ட செயல், கீழடியில் ஒன்றுமில்லை என்று தான் ஶ்ரீராமன் ஆய்வறிக்கை சமர்பிப்பார்.
தமிழர்களின் உண்மைக்கு எதிராகவும், வரலாற்றுக்கு எதிராகவும், தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகாவும் பாஜக எடுக்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தமிழ் சமூகம் பதிலடி கொடுக்கும்” என்றார்.