
சென்னை: ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த பேருந்து மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் உயிரிழந்தார். 4 கார்களும் சேதம் அடைந்தன. அரும்பாக்கம் 100 அடி சாலை, தவசு குட்டி பிரியாணி கடை வழியாக நேற்று காலை 6.10 மணியளவில் அரசுப் பேருந்து ஒன்று கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்தை தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த வேலுமணி (58) என்பவர் ஓட்டினார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஸ்டீரிங்கிலேயே மயங்கி சாய்ந்தார். இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் இடதுபுறம் நடந்து சென்று கொண்டிருந்த சேப்பாக்கம், லால் முகமது தெருவைச் சேர்ந்த சசிகுமார் (63) என்பவர் மீது பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.