
Doctor Vikatan: எனக்கு கடந்த சில வருடங்களாக ஒற்றைத் தலைவலி இருக்கிறது. எப்போதெல்லாம் தலை வலிக்கிறதோ, அப்போதெல்லாம் பெயின் கில்லர் எடுத்துக்கொண்டால்தான் வலி குறையும். இப்போது சில நாள்களாக மாத்திரை எடுத்துக்கொண்ட பிறகு வலி இன்னும் அதிகமாவது போல உணர்கிறேன். இதை எப்படிப் புரிந்துகொள்வது… மாத்திரை இல்லாமல் வலியை எப்படிச் சமாளிப்பது?
பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் ஞானசண்முகம்
தலைவலியைத் தாங்க முடியாத நிலையில்தான் பெயின் கில்லர் எனப்படுகிற வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில் அந்த வலி நிவாரணிகள் அளவுக்கு அதிகமாகும்போது அவையே தலைவலியை ஏற்படுத்தலாம். இத்தகைய வலியை ‘மெடிக்கேஷன் ஓவர்யூஸ் ஹெட்டேக்’ (Medication overuse headache) என்கிறோம்.
பெயின் கில்லர் மருந்துகள் என நாம் பொதுவாகக் குறிப்பிடுபவை, பாராசிட்டமால் மற்றும் என்எஸ்ஏஐடி (NSAIDs) மருந்துகள்தான். இவற்றை அடிக்கடியும் அதிக அளவிலும் பயன்படுத்தும்போது அவையே வலியைத் தூண்டும் காரணிகளாக மாறலாம். அதாவது இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது தற்காலிகமாக வலி குறைவதுபோல உணர்வார்கள். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும் வலி அதிகமாகிவிடும். வலி வந்ததும் மீண்டும் பெயின் கில்லர் உபயோகிப்பார்கள். இது இப்படியே தொடர்ந்துகொண்டிருக்கும்.

தலைவலியில் பல வகைகள் உள்ளன. ‘இன்டர்நேஷனல் ஹெட்டேக் சொசைட்டி’ (International Headache Society) என்ற அமைப்பு அதை வகைப்படுத்துகிறது. அதன்படி, மெடிக்கேஷன் ஓவர்யூஸ் ஹெட்டேக் என்பது, மாதத்தில் 15 நாள்களுக்காவது பெயின் கில்லர் உபயோகிப்பது, அதை தொடர்ந்து மூன்று மாதங்களுக்குச் செய்திருப்பது, அதன் காரணமாக வந்த தலைவலியைக் குறிக்கிறது. இந்த பெயின் கில்லரானது பாராசிட்டமாலாக இருக்கலாம் அல்லது எனப்படும் என்எஸ்ஏஐடி எனப்படும் ‘நான்ஸ்டீராய்டல் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி’ வகை மருந்தாக இருக்கலாம்.
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவிகிதத்தினருக்கு இந்த வகை தலைவலி அதிகம் வருவதைப் பார்க்கிறோம். மைக்ரேன் தலைவலி என்பது சிலருக்கு எப்போதாவதும் சிலருக்கு அடிக்கடியும் வரும். அடிக்கடி மைக்ரேன் தலைவலியால் பாதிக்கப்படுவோர், அடிக்கடி மாத்திரைகள் எடுப்பதால், இந்தத் தலைவலி பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் குறிப்பாக, டிப்ரெஷன், பதற்றம் உள்ளவர்கள், பெண்களுக்கெல்லாம் இந்தத் தலைவலி அதிகம் வரலாம். மைக்ரேனால் பாதிக்கப்பட்ட பலரும், ‘மாத்திரை போட்டாதானே வலி குறையுது… மாத்திரை போடாம எப்படிச் சமாளிக்கிறது’ என்று கேட்பார்கள்.

மூளையில் வலியை உருவாக்கும் இடம் தனியே இருக்கும். பெயின் கில்லர் போடும்போது, அது அந்தப் பகுதியில் சென்று வேலை செய்து வலியைக் குறைக்கும். அடிக்கடி பெயின் கில்லர் எடுக்கும்போது, மூளையில் தலைவலியை உருவாக்கும் சென்சிட்டிவிட்டி அதிகமாகும். சாதாரணமாக ஒரு நபருக்கு அரிதாக தலைவலி வருகிறது என்றால், மைக்ரேன் பிரச்னை உள்ளவர்களுக்கு சின்னச் சின்ன தூண்டல் காரணிகளால்கூட தலைவலி வரும். அந்த சென்சிட்டிவிட்டியை இந்த பெயின் கில்லர் மருந்துகள் அதிகரிக்கும்.
வருமுன் காப்பதுதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு. மைக்ரேன் பாதிப்புள்ளவர்கள், அடிக்கடி மாத்திரை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாரம் இரண்டு முறையைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மிதமான வலியைத் தாங்கிக் கொள்ளலாம். தாங்க முடியாத வலிக்கு மட்டும் மாத்திரை எடுக்கலாம். வாழ்வியல் மாற்றங்களையும் பின்பற்ற வேண்டும். சரியான தூக்கமின்மை, நேரத்துக்குச் சாப்பிடாதது, ஸ்ட்ரெஸ் என தலைவலியைத் தூண்டும் காரணிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும். வீட்டு உணவுகளைச் சாப்பிட வேண்டும். ஜங்க் ஃபுட்ஸை தவிர்க்க வேண்டும். ஸ்ட்ரெஸ் அறவே தவிர்க்கப்பட வேண்டும். யோகா பயிற்சிகள் செய்வது தூக்கத்தை முறைப்படுத்தி, மைக்ரேன் தலைவலியின் தீவிரத்தைக் குறைக்கும்.

மைக்ரேன் தலைவலி வந்தவர்கள் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும். பெயின் கில்லர் அல்லாத, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ப்ரிவென்ட்டிவ் மெடிசின்ஸ் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு எடுத்தாலே மைக்ரேன் தலைவலி குறையும். மைக்ரேன் தலைவலிக்கான சரியான சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும். பெயின் கில்லர் மருந்து உபயோகத்திலிருந்து வெளியே வர வேண்டும். இது சற்று சவாலானதுதான் என்றாலும் கஷ்டப்பட்டாவது இதைச் செய்துதானாக வேண்டும். ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றால், இந்தத் தலைவலியிலிருந்து சீக்கிரமே வெளியே வந்துவிடலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.