
திருவள்ளூர்/ சென்னை: சென்னையில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதிகாலை திருவள்ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தால், விரைவு ரயில், புறநகர் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து 2 இன்ஜின்கள் கொண்ட சரக்கு ரயில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாலாஜா சைடிங் நிலையத்துக்கு புறப்பட்டது. தலா 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 45 டேங்கர்களில் டீசலும், 5 டேங்கர்களில் பெட்ரோலும் நிரப்பப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4.55 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, 2 இன்ஜின்கள், ஒரு டேங்கர் ஆகியவை திடீரென தனியாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், ரயில் நிலை தடுமாறி, 18 டேங்கர்கள் அடுத்தடுத்து தடம்புரண்டன. பெட்ரோல், டீசல் நிரப்பிய டேங்கர்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. மளமளவென மற்ற டேங்கர்களுக்கும் தீ பரவியதில், டேங்கர்கள் வெடித்து சிதறின. இதனால், பல அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது.