
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 11.18 லட்சம் பேர் தேர்வை எழுதி உள்ளனர். எத்தனை தேர்வு மையங்கள், எத்தனை ஆயிரம் பணியாளர்கள், எத்தனை லட்சம் தேர்வர்கள்.. அனைவரையும் ஒருங்கிணைத்து மிகுந்த கவனத்துடன் தேர்வாணையம் செயல்பட்டு இருக்கிறது. ஆணையத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து பல குற்றச்சாட்டுகள், விமர்சனங்களை பலர் எழுப்பலாம். அதன் உண்மைத் தன்மைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், தேர்வுக்கான ஏற்பாடுகளைப் பொருத்தமட்டில் பெரிதாகக் குறையேதும் இல்லை என்பதே உண்மை. தேர்வு எழுதிய பல இளைஞர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில், எல்லாத் தேர்வு மையங்களிலும் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவே கூறினார்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் திட்டமிடல், உழைப்பு,அர்ப்பணிப்பு பாராட்டுக்கு உரியது.