
கடலூர் / புதுச்சேரி: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று மாலை கடலூருக்கு வந்த பழனிசாமிக்கு, ரெட்டிச்சாவடியில் கடலூர் வடக்கு மாவட்டச்செயலாளர் எம்.சி.சம்பத்தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: கடலூர் மாவட்டத்தில் தானே புயலின்போது நாங்கள் ஓடிவந்து நிவாரண உதவிகளை செய்தோம். கடந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விலைஇல்லா கறவை மாடு, ஆடு, கோழிகளை திமுக அரசு நிறுத்திவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும்போது, இவை வழங்கப்படும். ஏழை பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும்.