
சென்னை: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக ஜூலை 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழா மற்றும் பெரம்பலூர், தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்பதில் பாஜகவும் உறுதியாக உள்ளது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். அதன்பிறகு, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வந்தார். அப்போது, கூட்டணி கட்சிகளுடன் பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.