
ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம், மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஜூலை 3, 2025 அன்று, அனகாபள்ளி மாவட்டத்தின் புடிமடகா கிராமத்திலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது.
நடந்தது என்ன?
யெரய்யா, அவரது சகோதரர் கொரலய்யா மற்றும் மற்றொரு மீனவருடன், பாரம்பரிய மீன்பிடி படகில் அதிகாலை 2 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். காலை 9 மணியளவில், அவர்களது வலையில் சுமார் 200 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கருப்பு மார்லின் மீன் சிக்கியிருக்கிறது.
இந்த மீன், அதன்வேகம், வலிமை மற்றும் கூர்மையான வாள் போன்ற மூக்கு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது. மீனவர்கள் வலையை வெட்டி விடுமாறு அறிவுறுத்திய போதிலும், யெரய்யா மீனை இழுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மீனின் திடீர் அசைவால், அவரது கால் வலையில் சிக்கியது. மற்ற மீனவர்கள் தடுக்க முயல்வதற்கு முன்பே, மீன் அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு எச்சரிக்கை
கருப்பு மார்லின் கடலில் மிகவும் ஆபத்தான மற்றும் வேகமான மீன்களில் ஒன்றாகும். இது மணிக்கு 110 கிமீ வேகத்தில் நீந்தக்கூடியது. இதன் எடை 900 கிலோ வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.
கருப்பு மார்லின் மீன்கள், மீனவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை என்று கடல் உயிரியல் நிபுணர் டாக்டர் நலின் பிரசாத் எச்சரித்துள்ளார். இந்த மீன்கள் சிக்கியவுடன் வலையை வெட்டி விடுவது பாதுகாப்பானது என்று அவர் கூறுகிறார்.
இந்த மீன்கள் மீனவர்களுக்கு பொருளாதார ரீதியாக மதிப்புமிக்கவை, இதன் இறைச்சி ஒரு கிலோவுக்கு 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், இந்த மீன்களில் பாதரசம் (mercury) அதிக அளவில் இருப்பதால், அடிக்கடி உண்பது, குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அனகாபள்ளி மாவட்ட மீன்வளத் துறை அதிகாரி ஜி. விஜயா கூறுகையில், ”இத்தகைய சம்பவங்கள் அரிதாக இருந்தாலும், மார்லின் போன்ற வலிமையான மீன்கள் மீனவர்களை இழுக்கக்கூடியவை” என்று கூறியிருக்கிறார். மீனவர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு காவல்துறை மற்றும் உள்ளூர் மீனவர்கள் தொடர்ந்து யெரய்யாவை தேடி வந்தநிலையில் தற்போது அவருக்கான சடங்கை செய்ய வீட்டில் உள்ளவர்கள் கூடியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அனகாபள்ளி கடற்கரையில் மோல்லி ஜோகன்னா என்ற மீனவர், கருப்பு மார்லின் மீனால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.