
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி-யுமான சு. வெங்கடேசன் எழுத்து மற்றும் ஓவியர் மணியம் செல்வன் ஓவியத்துடன் விகடன் பிரசுரத்தில் வெளியாகி `வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல், விற்பனையில் ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்ததை முன்னிட்டு, விகடன் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று `வெற்றிப் பெருவிழா’ நடைபெற்றது.
மாலை 5:30 மணியளவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் நாவலாசிரியர் சு. வெங்கடேசன், நடிகர் ரஜினிகாந்த், விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நடிகை ரோகிணி, நிகழ்ச்சி நெறியாளர் கோபிநாத், இயக்குநர் ஷங்கர், மாநில நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் மற்றும் வேள்பாரி வாசகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
வேள்பாரிதான் நியாபகத்துக்கு வந்தது
நிகழ்ச்சியில் பேசிய ஷங்கர், “ஆனந்த விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனுவாசன் ஒருமுறை என்னிடம், `ஆனந்த விகடனில் வேள்பாரி என்று ஒரு நாவல் வாராவாரம் வந்து கொண்டிருக்கிறது. அதைப் படித்தால் படம் பார்க்கிற மாதிரியே இருக்கிறது. நீங்கள் படம் எடுத்தால் நன்றாக இருக்கும்’ என்றார்.
நான் வெளியில் கதைகள் பண்ணுவதில்லை என்பதாலும், படிக்க நேரமில்லை என்பதாலும், `பார்க்கிறேன் சார்’ என்று சொல்லியிருந்தேன்.
கொரோனா டைம்ல புத்தகங்கள் படிக்கலாம் என்று முடிவு செய்தபோது, வேள்பாரிதான் நியாபகத்துக்கு வந்தது.
அப்போது சரி வேள்பாரி படிக்கலாம் என்று புத்தகத்தைத் தேடினால், எங்கேயும் ஒரு பிரதி கூட கிடைக்கவில்லை. பின்னர், சு. வெங்கடேசன் தான் வைத்திருந்த பிரதியை அனுப்பினார்.
காட்சிகள் விரிந்து கொண்டே இருக்கிறது!
நாவல்கள் பெரும்பாலும் உணர்வுகளாகத்தான் விரியும். ஆனால், வேள்பாரி விஷுவல்களுடன் விரிகிறது. சில்அவுட்டில் அறிமுகமாகும் பாரியில் ஆரம்பித்து, நான்கு வருடத்திற்கு ஒருமுறை தோன்றுகின்ற ஒளிவாள், வட்டாற்று மணல்களில் வருகின்ற ஆயிரம் யானைப்படைகள் எனக் காட்சிகள் விரிந்து கொண்டே இருக்கிறது.
கபிலரின் விருந்து காட்சி எனக்கு உண்மையிலேயே பின்னணியில் ஒரு பாடலாக ஓடுகிறது. ஒரு மதம் கொண்ட யானையை, குழந்தையை மார்பில் வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு பெண்மணி அசால்டாக பின்னாடி தூக்கிப் போட்டுக் கொண்டு, ஒரு மூலிகைச் செடியைக் காட்டி யானையை மண்டியிட வைத்து காட்டுக்குள் ஓட விடுவார்.
பரம்பு ஆசான் தேக்கன் இறந்ததும் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடுகின்ற கூவல் குடி வீரன் விதவிதமான ஒலிகளை எழுப்பி, அந்தக் காட்டில் இருக்கின்ற பூச்சி, பறவை, நாய், தவளை எல்லாவற்றிற்கும் தெரிவிக்கிறான்.
அவை அத்தனையும் சோகத்தோடு ஒரே நேரத்தில் குரல் எழுப்புவது அற்புதமான இடம்.
இதை நான் எங்கும் கேள்விப்பட்டதும் இல்லை, படித்ததும் இல்லை. இதுவரைக்கும் வராத ஒரு சோகப்பாடல் சுச்சுவேஷன் அது.

ஏகப்பட்ட விஷயங்களை சு. வெங்கடேசன் அருமையாக எழுதியிருக்கிறார். பூமிக்கு அடியில் விலையுயர்ந்த மணி கற்களை சேமித்து வைக்கின்ற இடத்தை பாழி நகர் என்று சொல்வது மாதிரி, தனக்குள் விலை மதிப்பில்லாத அறிவையும் படைப்புத் திறனையும் சேமித்து வைத்திருக்கின்ற பாழி நகர் என்று இவரைச் சொல்லலாம்.
அற்புதமான ஓவியங்களை வரைந்த மணியம் செல்வனுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
கல்கிக்கு பொன்னியின் செல்வன் மாதிரி ஆனந்த விகடனுக்கு வேள்பாரி. பொன்னியின் செல்வன் மாதிரி வேள்பாரியின் புகழ் இன்னும் 50 ஆண்டுகள் தாண்டி நிலைத்திருக்கும்.
அறம் என்றால் அறுக்கிறதுதானே என்று கேள்வி கேட்கும் காலகட்டம் இது. ஆனால், அறம் என்றால் என்ன, இயற்கை முக்கியத்துவம் என்றால் என்ன என்பதை இந்த தலைமுறைக்குப் புரிகின்ற மாதிரி எழுதியிருக்கிறார் வெங்கடேசன்.
இதைப் பாடப் புத்தகமாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். முதலில் என்னுடைய கனவுப் படமாக இருந்தது எந்திரன்.
இப்போது என்னுடைய கனவு படம் வேள்பாரி. எப்போது ஒரு பெரிய படத்தை எடுத்தாலும், சந்திரலேகா மாதிரி பிரம்மாண்டமாக இருக்கும் என்று சொல்வார்கள்.

ஆனால், உண்மையிலேயே சந்திரலேகாவுக்கு மேலேயும் ஒரு படமாக வேள்பாரி வரும் என்று நம்புகிறேன்.
எஸ்.எஸ். வாசன் ஐயா இருந்திருந்தால் அவரே இதைப் படமாகத் தயாரித்திருப்பார்.
இன்னும் புது புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்தக்கூடிய கதையாக இருக்கிறது வேள்பாரி.
கேம் ஆஃப் த்ரோன்ஸ், அவதார் மாதிரி உலகம் போற்றக்கூடிய அறிவுப்பூர்வமான ஜனரஞ்சகமான காவியமாக ஒரு பெருமைமிக்க இந்திய படைப்பாக, தமிழ் படைப்பாக வரக்கூடிய சாத்தியம் இதில் இருக்கிறது. ஹோப், ட்ரீம்ஸ் கம்ஸ் ட்ரூ (Hope, Dream Comes True).” என்றார்.
வேள்பாரி Audio Formatல் கேட்க :
https://play.vikatan.com/Velpari-audio-book
வேள்பாரி புத்தகம் வாங்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்