
சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தொகுதிப் பங்கீடு குறித்தும், அதிமுக வைகைச்செல்வன் வைகோவை `வைகோ பொய்கோ’ என விமர்சித்தது உள்ளிட்டப் பல்வேறு கேள்விகளுக்கு திருச்சி எம்.பி-யும் ம.தி.மு.க முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பதிலளித்திருக்கிறார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கும் ம.தி.மு.க சார்பில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெறும்.
எங்கள் கட்சியின் தலைவர் வைகோ குறித்து வைகைச்செல்வன் பேசியது அவருடைய தனிப்பட்ட கருத்து. அரசியல் இயக்கங்களில் தவறுகள் நடப்பது இயல்புதான். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தது தவறு என வைகோ வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். அதற்காக அ.தி.மு.க தீண்ட கூடாத கட்சி எனப் பொருளல்ல. எம்.ஜி.ஆரையோ ஜெயலலிதாவையோ அவர் இழிவுபடுத்தி எந்தக் கருத்தும் கூறியதில்லை. மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும்.
ம.தி.மு.க-விலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டவர்தான் தி.மு.க-வில் சேர்த்துள்ளார். இன்னும் நீக்கப்பட்ட சிலர் வேறு வேறு கட்சிகளில் இணையலாம். ம.தி.மு.க-வில் இன்னும் சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். தலைமைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வேறு சில இயக்கங்களில் இணையலாம். அது அவர்களின் உரிமை. கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர்தான் முடிவெடுப்பார்.

ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் காலி நாற்காலிகளை படம் எடுத்த பத்திரிகையாளர்களை அடிக்க வேண்டும் என வைகோ கூறவில்லை. வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர். பொடா சட்டம் வந்த பொழுது வைகோ அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என நாடாளுமன்றத்தில் பேசினார். பொடாவில் பத்திரிகை துறையினரையும் கைது செய்யலாம் என இருந்தது, அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என பேசியவர் வைகோ.
பத்திரிகையாளர்களுக்காக முதலில் நிற்கும் நபர் வைகோ. கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என ம.தி.மு.க எங்கும் கேட்கவில்லை. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார். ஆனால், அங்கிகாரம் பெற்றக் கட்சியான மதிமுக 8 இடங்களிலாவது வெற்றிபெற வேண்டும் என்றால், குறைந்தது 12 இடங்களிலாவது போட்டியிட வேண்டும்” என்றார்.