
சென்னை: கடலூரில் தேவநாதசுவாமி கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுத் துறை செயலர்கள் உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்திய தற்காக மன்னிப்பு கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். தனியார் பள்ளியின் கோரிக்கையை ஏற்று, வேறுஇடம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
கடலூர் கூத்தப்பாக்கத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியை அகற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக ஆன்மிக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.