
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நவீன் (37). இவர் தனியார் பால் நிறுவனத்தில் மேலாளராக சென்னையில் பணியாற்றி வந்தார். இதையொட்டி மாதவரத்தில் நவீன் தங்கியிருந்தார். இந்தநிலையில், பால் நிறுவனத்தில் நடந்த ஆடிட்டிங்கில் நவீன், 44.5 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. அதுதொடர்பாக பால் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள், கடந்த 27.6.2025-ம் தேதி கொளத்தூர் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் ஒன்றைக் கொடுத்தனர். அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்த தொடங்கியதும் நவீன் மனமுடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த 9.7.2025-ம் தேதி புழல் காவல் நிலையத்துக்குட்பட்ட பிரிட்டானிய நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள குடிசையில் நவீன் தூக்கில் தொங்குவதாக நவீனின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குச் சென்று பார்த்த நவீனின் சகோதரி, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் புழல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நவீனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் நவீன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்தபோது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் வேலை செய்த நிறுவனத்துக்கு இ-மெயில் அனுப்பிய விவரம் கிடைத்தது. அதில் 5 அதிகாரிகளின் மிரட்டலால் இந்த விபரீத முடிவை எடுப்பதாக நவீன் குறிப்பிட்டிருப்பதாக தகவல் உள்ளது. அதன்அடிப்படையில் புழல் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து நவீன் தரப்பில் பேசியவர்கள், “கடந்த 27.4.2022-ம் ஆண்டு முதல் நவீன், பால் நிறுவனத்தில் கருவூல மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் 44.5 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக பால் நிறுவனம் தரப்பில் காவல் துறை அதிகாரி ஒருவரிடம் புகாரளிக்கப்பட்டது. அந்த அதிகாரியின் உத்தரவின்பேரில் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் போலீஸார் நவீனிடம் விசாரித்திருக்கிறார்கள். அப்போது நவீன், பணத்தை திரும்ப கொடுப்பதாகக் கூறியபிறகும் விசாரணை என்ற பெயரில் அவருக்கு மனஉளைச்சலை பால் நிறுவன அதிகாரிகளும் காவல்துறையினரும் மிரட்டி வந்திருக்கிறார்கள்.
அதனால் நவீன், கடந்த 26.6.2025-ம் தேதி வங்கி பணபரிவர்த்தனை மூலம் 5 கோடி ரூபாயை திரும்ப கொடுத்தார். பணத்தைத் திரும்ப கொடுத்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பால் நிறுவன அதிகாரிகள் இருவர் நவீனை மிரட்டியிருக்கிறார்கள். அதனால் பயந்து போன நவீன் தன்னுடைய சகோதரிக்கும் பால் நிறுவனத்துக்கும் இ-மெயில் மூலம் தற்கொலை செய்து கொள்ள போகும் தகவலை அனுப்பிவிட்டு தன்னுடைய காரில் சம்பவ இடத்துக்குச் சென்று விபரீத முடிவை எடுத்திருக்கிறார். சடலமாக மீட்கப்பட்ட நவீனின் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டிருப்பதால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. நவீனை இந்த முடிவை எடுக்க தூண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, “பால் நிறுவன மேலாளர் நவீன் உயிரிழந்த சம்பவத்தை சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ்தான் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். நவீன் மீது பால் நிறுவனம் புகாரளித்தது உண்மைதான். ஆனால் அந்த புகார் தொடர்பாக பால் நிறுவனத்திடம் ஆதாரங்களைக் கேட்டிருந்தோம். அதை அவர்கள் எங்களிடம் கொடுக்காத சூழலில் எங்களால் எப்படி நவீனிடம் விசாரிக்க முடியும். நவீன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் 5 கோடி ரூபாய் பணத்தை திரும்ப அனுப்பிய தகவலும் எங்களுக்குத் தெரியாது. நவீனின் மரணம் குறித்து விசாரித்து வருகிறோம். அந்த விசாரணையில் நவீனை மிரட்டியவர்கள் குறித்த விவரங்களும் தெரியவரும். அதன்அடிப்படையில் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை அறிக்கையில்தான் நவீன் எப்படி இறந்தார் என்பது தெளிவாக தெரிந்துவிடும். அதன்பிறகே அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும்” என்றனர்.