
கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், கட்சியின் நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் மீண்டும் மதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இன்று ( ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் மல்லை சத்யாவின் புகைப்படம் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மல்லை சத்யா கட்சியில் இருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வைகோ, ” மல்லை சத்யாவை உடன் பிறவாத தம்பியாகத் தான் நினைத்தேன். என்னைப் பற்றி மிக மோசமாக, பேசக்கூடிய நபர்களுடன் தொடர்பில் இருக்கிறார். பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார்.
கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம் என்றும், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மல்லை சத்யாவின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறமுடியாது. அது உண்மையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து வைகோ குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மல்லை சத்யா, “வைகோ சொன்ன வர்த்தையைத் தாங்கி கொள்ள முடியாத மனவேதனையில் இருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார்.
இதுவரை அவரது உயிரை மூன்று முறை காப்பாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போது வைகோ, தனது மகனுக்காக, எனக்கு துரோகிப் பட்டம் கொடுத்து கட்சியிலிருந்து வெளியேற்றப் பார்க்கிறார்” என்று கூறியிருக்கிறார்.