
அதிமுக-வில் இருந்த போது புதுக்கோட்டையில் தான் கட்டிய பொறியியல் கல்லூரிக்கு ‘அம்மா’ விசுவாசத்தில் ஜெ.ஜெ கல்லூரி என பெயர் வைத்தவர் அமைச்சர் ரகுபதி. அதுவே திமுக-வுக்கு வந்ததும் கருணாநிதி பெயரில் அந்தக் கல்லூரிக்குள் அரங்கம் அமைத்தவர். அந்தளவுக்கு, இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருந்து பழகிவிட்ட ரகுபதி, எந்தச் சர்ச்சையிலும் அத்தனை எளிதில் சிக்கிக் கொள்ளாதவர். இந்த ஆட்சியில் முதலில் சட்டத்துறைக்கு அமைச்சராக இருந்தார். இப்போது இயற்கை வளங்கள் துறையை கவனிக்கும் பொறுப்பை அவருக்கு தந்திருக்கிறது திமுக அரசு.
இந்த நிலையில், திமுக-வின் மற்ற மூத்த முன்னோடிகள் எல்லாம் எப்போதோ தங்களின் வாரிசுகளை அரசியலுக்கு இழுத்துவந்துவிட்ட நிலையில், ரகுபதியும் இப்போது அந்த தேசிய நீரோட்டத்தில் கலந்திருக்கிறார். ஆம், ரகுபதியின் மகன் மருத்துவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அவரது அரசியல் வாரிசாக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.