
சென்னை: மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், பெரம்பர் உள்பட பல்வேறு இடங்களில் எஸ்ஆர்எம்யு, டிஆர்இயு, எஸ்ஆர்இஎஸ் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார்மயமாக்கல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு) சார்பில், தெற்கு ரயில்வேயில் கிளைகள் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் விரோத, 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறுவது, ரயில்வே தனியார் மயமாக்குவதை கைவிடுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ரயில்வே கோட்டத்தில் எழும்பூர், சென்ட்ரல் உள்பட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.