
பாட்னா: “வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செயல்படுத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததுபோல் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நடக்க அனுமதிக்கமாட்டோம்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர் – special intensive revision of electoral rolls ) நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணி சார்பில் இன்று பாட்னா தேர்தல் அலுவலகம் நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டோர் மத்தியில் ராகுல் காந்தி பேசியது: “மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மோசடிகள் நடைபெற்றன. அதையே பிஹாரிலும் நடத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் அதை நடக்கவிடமாட்டோம். பிஹாரில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்’ , மகாராஷ்டிரா தேர்தல் மோசடியின் நீட்சியே. இதன் மூலம் மக்களின் வாக்குரிமை மட்டுமல்லாது அவர்களின் எதிர்காலமும் பறிக்கப்படும்.