
கோவை சுற்றுப் பயணத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ” திமுக கூட்டணியை நம்பி தேர்தலில் நிற்கிறது. நாங்கள் மக்களை நம்பி தேர்தலில் நிற்கிறோம். கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. முத்தரசன் ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார்.
முத்தரசன் அவர்களே உங்கள் கட்சி போல எங்கள் கட்சியை நினைத்துவிட வேண்டாம். உங்கள் கூட்டணியில் தான் பிரச்னை உள்ளது. உங்கள் கூட்டணியில் உள்ள சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், ‘திமுக மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது.’ என்று சொல்கிறார்.
திமுக கூட்டணியில் தான் குழப்பம்
அதிமுக பாஜக கூட்டணி இணக்கமாக இல்லை என்று சொல்ல திருமாவளவன் யார். அவர் உள் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசுகிறார். திமுக கூட்டணியில் தான் குழப்பம் நிலவுகிறது. எங்கள் கூட்டணி நிலை குறித்து தெளிவு படுத்திவிட்டோம். நாங்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் உங்களுக்கு என்ன கவலை.

நம் கூட்டணியை பார்த்து திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக ஆட்சியில் கோவைக்கு எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எந்த நேரமும் குடும்பத்தை பற்றியே சிந்திக்கிறார்கள்.
திமுகவுக்கு கண் உறுத்துகிறது
50 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகப்பற்ற சூழல் நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. பொதுவாக கரன்டை தொட்டால்தான் ஷாக் அடிக்கும். திமுக ஆட்சியில் கரன்ட் பில்லை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. கோயில்களை கண்டாலே திமுகவுக்கு கண் உறுத்துகிறது. அந்தப் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள்.

இது நியாயமா. ஏன் அரசு பணத்தில் கல்லூரி கட்டக் கூடாதா. இதை சதி செயலாக மக்கள் பார்க்கிறார்கள். மனிதனுக்கு கண் எப்படி முக்கியமோ, நாட்டுக்கு கல்வி முக்கியம். அதை அரசாங்கம் செய்ய வேண்டும். ஸ்டாலின் ஆட்சியை ஒரே வார்த்தையில் கூற வேண்டும் என்றால் Simply waste.” என்றார்.
இந்நிலையில் கோயில் பணத்தில் கல்லூரி கட்டுவது என்று எடப்பாடி பழனிசாமியின் கருத்தை அரசியல் களத்தில் சர்ச்சையாகியுள்ளது. அவரின் கருத்து பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை வெளிப்படுத்துவதாக திமுக கூட்டணி விமர்சித்து வருகிறது.

நேற்று இரவு கோவை புலியகுளம் பகுதியுடன் எடப்பாடி பழனிசாமி தன் 2 நாள் கோவை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். நிறைவு கூட்டம் கோவை தெற்கு தொகுதியில் நடைபெற்றதால் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.