
புதுடெல்லி: உ.பி. தலைநகர் லக்னோவில் கடந்த 3-ம் தேதி கோமதி நகரில் மீண்டும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முஸ்லிமாக மதம் மாறிய 12 பேர் மீண்டும் தாய் மதமான இந்து மதத்துக்கு திரும்பினர். இந்நிகழ்ச்சியை விஷ்வ இந்து ரக்ஷா பரிஷத் நடத்தியது. அப்போது பல்ராம்பூரை சேர்ந்த ஜுங்கூர் பாபா என்பவர் தங்களை முஸ்லிம் மதத்துக்கு மாற்றியதாக பலர் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, மதம் மாற்ற புகாரில் ஜுங்கூர் பாபா சிக்கி, கடந்த நவம்பர் 2024-ம் ஆண்டு தேடப்பட்டு வந்தவர். இதனால், உ.பி. அதிரடி படை (ஏடிஎஸ்) ஜுங்கூர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. கோமதி நகர் நிகழ்ச்சிக்கு மறுநாள் ஜுங்கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்கள் நீத்து நவீன் ரொஹரா (எ) நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.