
சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனிமேல் ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில் கடந்த ஏப்.29-ம் தேதி நான் பேசும்போது, “இந்த மண்ணின் ஆதிக்குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருப்பதால், அந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்“ என்று குறிப்பிட்டேன்.