
தஞ்சாவூர், கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் அறிவழகன் (வயது 46), திருவேங்கடம் (41). இருவரும் சகோதரர்கள். திருமணம் ஆன அறிவழகன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். திருவேங்கடத்திற்கு திருமணம் ஆகவில்லை. சகோதரர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுதல், கூலி வேலை என இருவரும் கிடைத்த வேலைக்கு சென்றுள்ளனர். மேலும் இவர்களுக்கு சொந்தமாக கடை ஒன்று இருந்துள்ளது.
அந்த கடையை வாடகைக்கு விட்டுள்ளனர். மாதந்தோறும் வரும் வாடகை பணத்தை இருவரும் பிரித்து எடுத்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல் கடை வாடகை வந்துள்ளது. வீட்டில் மது குடித்த இருவரும் போதையில் இருந்துள்ளனர். அப்போது வாடகை பணத்தை பங்கு போட்டுள்ளனர்.
வாடகை பணத்தை சரி சமமாக பிரிக்கவில்லை என திருவேங்கடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இருவருக்கும் நடந்த வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியுள்ளது. அப்போது வீட்டில் கிடந்த கட்டையை எடுத்த அறிவழகன் தன் தம்பி திருவேங்கடத்தை தாக்கியுள்ளார். ரத்தவெள்ளத்தில் சரிந்த திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து அறிவழகன் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில், இவர்களது தாயும் மற்றொரு சகோதரரரும் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது திருவேங்கடம் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த் போலீஸ் திருவேங்கடம் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உடற்கூறாய்வு செய்ய வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அறிவழகனை கைது செய்ததுடன் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.