
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதாலும், புதன்கிழமை பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இரண்டு நாட்களும் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேருந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து ஆணையருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிடப்பட்டபடி செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. இதனால், கேரளாவில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என்றும், தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் தீர்க்கத் தவறினால் ஜூலை 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.