
புனே கொண்ட்வா பகுதியில் கடந்த வாரம், புதன்கிழமை கூரியர் கொண்டு வந்த நபர் தனியாக இருந்த 22 வயது பெண்ணின் முகத்தில் ஸ்பிரே அடித்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருந்தார். அதோடு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சென்ற நபர் அப்பெண்ணின் மொபைல் போனில் செல்ஃபி ஒன்றையும் எடுத்துவிட்டு மீண்டும் வருவேன் என்றும், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது. விசாரணையில் கூரியர் பாய் வேடத்தில் வந்து 22 வயது பெண்ணை அந்த வாலிபர் முதல் முறையாக சந்திக்கவில்லை. ஏற்கனவே அந்த நபர் பல முறை அப்பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாதபோது வந்து சென்றது தெரிய வந்துள்ளது.
புதன் கிழமையும் அப்பெண் அந்த வாலிபரை தனது வீட்டிற்கு வரவழைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இருவரும் முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்து நண்பர்களாகி இருக்கின்றனர். அதன் பிறகு அந்த நட்பு அவர்களுக்குள் காதலாக மாறி இருக்கிறது. இதையடுத்து அப்பெண் அந்த வாலிபரை தனது வீட்டிற்கே வரவழைத்து ஒன்றாக இருந்துள்ளார். அப்பெண் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “புதன் கிழமை அந்த வாலிபர் வீட்டிற்கு வந்த போது அன்று அவருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. ஆனால் அவர் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டார். எனவேதான் கோபத்தில் அந்த வாலிபர் குறித்து போலீஸில் தவறான தகவலை தெரிவித்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதோடு அப்பெண்ணின் மொபைல் போனில் எடுக்கப்பட்ட செல்ஃபியை அப்பெண் தான் எடுத்திருந்தார். அவர்தான் போட்டோவில் எடிட் செய்து மிரட்டல் மெசேஜ் எழுதியிருந்ததும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடிக்கடி எதாவது ஒரு பார்சலை வாங்கிக்கொண்டு வந்து அப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு அவருடன் தனிமையில் இருப்பதை அந்த வாலிபர் வழக்கமாக கொண்டிருந்தார். இருவரது குடும்பமும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரிந்து இருந்தனர்.
இதே போன்று அப்பெண்ணின் முகத்தில் ஸ்பிரே எதுவும் அடிக்கவில்லை. வாலிபரும் கட்டாயப்படுத்தி வீட்டிற்குள் நுழையவில்லை என்றும், இருவரும் சேர்ந்துதான் செல்பி எடுத்துள்ளனர் என்று புனே போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ”ஐ.டி.துறையில் வேலை செய்யும் 27 வயது வாலிபரை பிடித்து விசாரித்து வருகிறோம். இருவரும் விருப்பப்பட்டு உறவு வைத்துக்கொண்டார்களா அல்லது வாலிபர் கட்டாய உறவு வைத்துக்கொண்டாரா என்பது விசாரணையின் இறுதியில்தான் தெரிய வரும். பாதிக்கப்பட்ட பெண் டேட்டா சயின்ஸ் முடித்துவிட்டு ஐ.டி. கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் தனது 11வது மாடிக்கு வரும் படி வாலிபருக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். அந்த வாலிபர் வீட்டிற்கு வந்துவிட்டு வெளியில் செல்லும் போது லிப்டில் சென்றால் கண்காணிப்பு கேமராவில் தெரிந்து விடும் என்று கூறி படிகளில் நடந்து செல்லும்படி அப்பெண் கேட்டுக்கொண்டுள்ளார். இருவரும் கடந்த ஒரு ஆண்டாக தொடர்பில் இருந்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வாலிபரிடம் விசாரித்தபோது, சம்பந்தப்பட்ட பெண் தான் தனிமையில் இருப்பதாகவும், மிகவும் போரடிப்பதாக கூறி என்னை வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அப்பெண்ணின் வீட்டில் இருந்தபோதுதான் செல்பி எடுத்துக்கொண்டோம். அவர் வீட்டை விட்டு சென்ற பிறகுதான் போட்டோவில் எடிட் செய்துள்ளார் என்று அந்த வாலிபர் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கை வந்தபிறகுதான் இது கட்டாய உறவா அல்லது விருப்பப்பட்டு நடந்த உறவா என்று தெரியவரும்”என்று தெரிவித்தார்.