
திருப்புவனம்: தனிப்படை போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி, தனது அறிக்கையை நாளை தாக்கல் செய்கிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரிடம், நகை திருட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன்குமார் ஆகியோரை போலீஸார் தாக்கியுள்ளனர். பின்னர் நவீன்குமாரை விட்டுவிட்டு, அஜித்குமாரை டிஎஸ்பி-யின் தனிப்படை போலீஸார் தாக்கியுள்ளனர். இதில் அவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக தனிப்படை போலீஸார் ராஜா, பிரபு, கண்ணன்,ஆனந்த், சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, ஜூலை 8-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.