
‘இங்கிலாந்து தோல்வி!’
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு தோல்விக்கான காரணங்கள் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியிருக்கிறார்.
‘காரணம் சொல்லும் ஸ்டோக்ஸ்!’
பென் ஸ்டோக்ஸ் பேசியதாவது, ”இது ஒரு கடினமான போட்டியாகவே இருந்தது. இரண்டு இடங்களில் நாங்கள் இந்தப் போட்டியை தவறவிட்டு விட்டோம் என நினைக்கிறோம். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்கையில் 200 யை சுற்றி இருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தார்கள். அங்கேயே நாங்கள் மேலும் சில விக்கெட்டுகளை எடுத்திருக்க வேண்டும்.
அதேமாதிரி, இந்திய அணி அவ்வளவு பெரிய ஸ்கோரை எடுத்த பிறகு நாங்கள் முதல் இன்னிங்ஸில் 80-5 என்ற நிலையில் இருந்தோம். நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்தோம். ஒரு கட்டத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அயர்ச்சியடைந்து விட்டோம். இந்திய அணி ஒரு க்ளாஸான அணி. நிறைய க்ளாஸான வீரர்களை கொண்டிருக்கிறார்கள்.

சுப்மன் கில் அசாத்தியமான பேட்டிங்கை ஆடியிருந்தார். இப்படியொரு அணிக்கு எதிராக பின் தங்கிய நிலையிலிருந்து மீண்டு வருவது ரொம்பவே கடினம். ஜேமி ஸ்மித் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டார். அவரும் ஹாரி ப்ரூக்கும் ஆடி எங்களை ஆட்டத்துக்குள் கொண்டு வந்த விதத்தை ட்ரெஸ்ஸிங் ரூமிலிருந்து பார்க்க அத்தனை அற்புதமாக இருந்தது. நாங்கள் எங்களின் திட்டங்களையெல்லாம் மறுசீரமைத்துக் கொண்டு லார்ட்ஸ் போட்டிக்கு வர வேண்டும்.’ என்றார்.