
பாட்னா: வாக்களிக்க தேவையான 11 ஆவணங்களில் ஒன்றையும் வாக்காளர்களால் வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் பதிவு அதிகாரி சரிபார்த்து முடிவெடுக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் பிஹார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) கொண்டுவந்துள்ளது. இதன்படி 2003ம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது ஆணைகள், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ், 1967 க்கு முன்பு பல்வேறு பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிற ஆவணங்கள் ஆகிய 11 ஆவணங்கள் சரிபார்ப்புக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை இடம்பெறவில்லை.