
‘அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா?’ என்கிற கேள்விக்கு பதில், கடந்த 2-ம் தேதி, தலாய் லாமாவின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கையாக வெளிவந்தது.
இந்த அறிக்கை, இந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி தலாய் லாமாவால் வெளியிடப் பட்டிருந்திருக்கிறது. ஆனால், இது பெரிய அளவில் வெளியில் தெரியவில்லை.
தற்போதைய தலாய் லாமாவின் 90-வது பிறந்த நாள் (ஜூலை 6(இன்று)) நெருங்கியதைத் தொடர்ந்து, ‘அடுத்த தலாய் லாமா யார்?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. காரணம், அவர் தனது 90-வது பிறந்த நாளில் அடுத்த தலாய் லாமா குறித்து அறிவிப்பை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.
இதனால், இந்த கேள்வி பரபரக்க, இப்போது இந்த அறிக்கை மீண்டும் அனைவருக்கும் தெரியும் விதத்தில் வெளியிடப்பட்டது.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது…
“2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி, திபெத்திய ஆன்மீக மரபு தலைவர்களின் சந்திப்பில், நான், திபெத் நாட்டிற்குள் இருக்கும் மற்றும் நாட்டிற்கு வெளியே இருக்கும் திபெத்தியர்களுக்கும், திபெத்திய புத்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கும், திபெத் மற்றும் திபெத்தியர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கும் தலாய் லாமா மரபு தொடர வேண்டுமா என்று கேட்டிருந்தேன். அப்போது ‘1969-லேயே, நான் சம்பந்தப்பட்ட மக்கள் தான் தலாய் லாமா மரபு எதிர்காலத்தில் தொடர்வது குறித்து முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்ததை சொல்லி தெளிவுப்படுத்தினேன்”.
தற்போதைய தலாய் லாமாவின் உண்மையான பெயர், டென்சின் கியாட்சோ. இவர் 14-வது தலாய் லாமா ஆவார். திபெத்தில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், அவரது இரண்டு வயதில் தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பயிற்சிகள் முடிந்து, தனது 15-வது வயதில், 1950-ம் ஆண்டு, திபெத்திய புத்த மதத்தின் முழு நேர தலைவராக பொறுப்பேற்றார்.

தலாய் லாமாவை பொறுத்த வரை, திபெத்திய புத்த மதத்திலும் சரி… திபெத்திய அரசாங்கத்திலும் சரி… அவர் தான் தலைவர். ஆனால், 2011-ம் ஆண்டு, தற்போதைய தலாய் லாமா தனது அரசாங்க தலைவர் பதவியில் இருந்து அவரே விலகி கொண்டார்.
அப்போதிருந்து அவர், திபெத்திய புத்த மத தலைவராக மட்டுமே தொடர்கிறார்.
“அப்போது நான், என்னுடைய 90 வயதை எட்டும்போது, திபெத்திய புத்த மரபில் இருக்கும் உயர் லாமா பதவியில் இருப்பர்வகளிடமும், திபெத்திய மக்கள் மற்றும் திபெத்திய புத்த மதத்தை பின்பற்றுபவர்களிடம், தலாய் லாமா மரபு தொடர்ந்து பின்பற்றுவது குறித்து ஆலோசிப்பேன் என்று கூறியிருந்தேன்”.
திபெத்திய புத்த மதத்தைப் பொறுத்தவரை, தலாய் லாமா இரக்கத்தின் போதிசத்துவரின் மறு அவதாரமாகக் கருதப்படுவார்கள். ஆக, அடுத்த தலாய் லாமாவாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், முந்தைய தலாய் லாமாவின் மறு அவதாரமாக கருதப்படுவார்கள்.
முந்தைய தலாய் லாமா இறந்த உடன், அடுத்த தலாய் லாமாவிற்கான தேடுதல் பணி தொடங்கும். இந்தத் தேடுதல் பணி சிறு வயது குழந்தைகளிடமே நடக்கும்.
முந்தைய தலாய் லாமா, அடுத்த தலாய் லாமா குறித்து ஒரு சில துப்புகளை விட்டு சென்றிருப்பார். அடுத்ததாக, கனவுகளில் வரும் குறிப்புகள், முந்தைய தலாய் லாமாவின் பொருள்களை குறிப்பிட்ட குழந்தை அறிய முடிகிறதா போன்றவற்றை வைத்து அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தலாய் லாமா இறக்கும்போது எந்த திசையை நோக்கி அவரது தலை இருந்ததோ, அந்த திசையில் சமீபத்தில் பிறந்த குழந்தைகளிடம் இந்த சோதனை நடத்தப்படும். அதுவும் அந்த குழந்தைகள் இயல்பிலேயே மிகுந்த அமைதியுடன் இருக்க வேண்டும்.
தலாய் லாமாவை மூத்த லாமாக்களும், பஞ்சன் லாமாக்களும் தேர்ந்தெடுப்பார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலாய் லாமாவிற்கு ஆன்மீக, கலாச்சாரம் போன்ற ரீதிகளில் பயிற்சி கொடுக்கப்படும். இந்தப் பயிற்சிக்காலம் 20 ஆண்டுகள் வரை ஆகலாம்.
இந்தப் பயிற்சி முடிந்தப் பிறகு, தலாய் லாமா முழு பொறுப்பிற்கு வந்துவிடுவார்.
அதுவரை தலாய் லாமா ஆற்ற வேண்டிய பொறுப்புகளை மூத்த லாமாக்கள் செய்து வருவார்கள்.
“கடந்த 14 வருடங்களில் தலாய் லாமா தொடர்வது குறித்து நான் வெளிப்படையாக எந்த விவாதத்தையும் செய்யவில்லை என்றாலும், பல்வேறு தரப்பில் இருந்து தலாய் லாமா மரபைத் தொடரக் கூறி கடிதங்கள் வந்துகொண்டே இருந்தது. திபெத்தியர்களும் இதை விரும்புகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, தலாய் லாமா தொடரும் என்று அறிவிக்கிறேன். காடன் போட்ராங் அறக்கட்டளை, புனித தலாய் லாமாவின் அலுவலகத்தை சேர்ந்தவர்களே எதிர்கால தலாய் லாமா தேர்வை செய்ய வேண்டும். அவர்கள் திபெத்திய புத்த மரபு தலைவர்கள் மற்றும் தலாய் லாமாக்களின் பரம்பரையுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்ட நம்பகமான சத்தியப்பிரமாண தர்ம பாதுகாவலர்கள் ஆலோசனைகளையும் பெற்றிருக்க வேண்டும். மேலும், தலாய் லாமா தேடுதல் மற்றும் அடையாளம் காண்பதில் பழைய மரபு பின்பற்றப்பட வேண்டும். தலாய் லாமா தேர்வு காடன் போட்ராங் அறக்கட்டளையின் முழு பொறுப்பு. இந்த விஷயத்தில் வேறு எவரும் தலையிடக் கூடாது”
‘வேறு யாரும்’ என்று அவர் குறிப்பிடுவது சீனாவைத் தான்.

திபெத், இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, சீனாவின் ஒரு பகுதியாகத் தான் திபெத் இருந்தது. 1911-ம் ஆண்டு சீன மன்னர் ஆட்சி வம்ச ஆட்சி திபெத்தில் முடிந்து, அங்கே மக்கள் ஆட்சி வந்தது.
பின்னர், 1950-களில், சீனா திபெத் நாட்டை ஆக்கிரமித்தது. அப்போதிருந்தே அது குறித்து திபெத் நாட்டில் அதிருப்தி இருந்தாலும், 1950-ம் ஆண்டு சீன ஆட்சியை எதிர்த்து திபெத் மக்கள் பெரிய போராட்டத்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கான முக்கிய காரணம், ‘தலாய் லாமாவின் பாதுகாப்பு’. திபெத் மக்கள், சீனா தலாய் லாமாவை கடத்தக்கூடும் என்று கருதினார்கள்.
காரணம், 2011-ம் ஆண்டு வரைக்குமே, திபெத்தின் அரசாங்கத்தின் தலைமை பொறுப்பை தலாய் லாமா தான் வகித்து வந்தார். திபெத்தை ஆக்கிரமித்த சீனாவிற்கு தலாய் லாமா பெரிய பிரச்னையாக இருந்து வந்தார்… இருந்தும் வருகிறார். அதனால், அவருக்கு எதாவது ஆபத்து ஏற்படலாம் என்று திபெத் மக்கள் கருதினார்கள். அதனால் தான், அந்தப் போராட்டம் வெடித்தது.
போராட்டம் பெரிதாக, 1959-ம் ஆண்டு, தலாய் லாமா திபெத்தில் இருந்து தப்பித்து இந்தியா வந்தார். அப்போதிருந்து அவர் இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் தர்மசாலாவில் இருந்து வருகிறார்.

தர்மசாலாவிற்கு வந்த தலாய் லாமா, அங்கு இருந்துகொண்டே, திபெத் நாட்டின் அரசாங்கத்தை நடத்தி வந்தார். திபெத்திற்கு வெளியே தலாய் லாமா இருந்தாலும், திபெத் மக்களுக்கு என்னவோ அவர் மீது இன்னமும் பெரிய நம்பிக்கை உள்ளது. அவரின் பேச்சிற்கு அங்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது. அது தான் சீனாவிற்கு பெரிய குடைச்சலாக இருந்து வருகிறது.
அதனால், தற்போது இருக்கும் தலாய் லாமாவிற்கு பிறகு, அடுத்து செய்யப்படும் தலாய் லாமா தேர்வில் சீனாவின் பங்கு இருக்க வேண்டும் என அது நினைக்கிறது.
அப்போது தான், அவர்களால் திபெத்தை தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். தலாய் லாமா தேர்வில் சீனாவின் பங்கு இருக்க வேண்டும் என்பதை அதன் வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
ஆனால், 1995 காலக்கட்டத்திலேயே, திபெத் புத்த மதத்தில் தங்களது தேர்வுகளை சீனா உள்நுழைக்கத் தொடங்கிவிட்டது.
திபெத்திய புத்த மதத்தில், தலாய் லாமாவிற்கு பிறகு, அடுத்த பவர்ஃபுல் பதவி, ‘பஞ்சன் லாமா’. 1995-ம் ஆண்டில், பத்தாவது பஞ்சன் லாமா இறந்தார்.
பதினோறாவது பஞ்சன் லாமாவாக ஆறு வயது சிறுவன் ஒருவரை தலாய் லாமா தேர்ந்தெடுத்தார். ஆனால், சீனா அந்தத் தேர்வை ரத்து செய்து, அதுவே ஒரு சிறுவனை பஞ்சன் லாமாவாக நியமித்தது. தற்போது, அவர் தான் பஞ்சன் லாமாவாக இருக்கிறார்.
தலாய் லாமா தேர்ந்தெடுத்த பஞ்சன் லாமா எங்கு போனார் என்றே தெரியவில்லை. தற்போது இதையே தான் தலாய் லாமா விஷயத்திலும் சீனா செய்ய நினைக்கிறது. ஆனால், அதை இப்போதைய தலாய் லாமா சிறிதும் விரும்பவில்லை. அதனால் தான், அவர் தலாய் லாமா தேர்வு திபெத் மத உயர் தலைவர்களின் கைகளில் உள்ளது என்று அழுத்தி கூறுகிறார்.

அடுத்த தலாய் லாமா விஷயத்தில் தற்போதைய தலாய் லாமாவும், சீனாவும் மோதிக்கொண்டால், அடுத்து இரண்டு தலாய் லாமாக்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஒரு தலாய் லாமாவை திபெத் புத்த மதம் தேர்ந்தெடுக்கும். இன்னொரு தலாய் லாமாவை சீனா தேர்ந்தெடுக்கும். சிறு வயதிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தலாய் லாமா பயிற்சி கொடுக்கப்படும் என்பதால், இந்த காலக்கட்டத்தை சீனா பயன்படுத்தி, சீனாவிற்கு தோதான ஒரு நபராக தலாய் லாமாவை மாற்றிவிடும்.
இந்த அச்சுறுத்தல் தான், 2011-ம் ஆண்டில் தலாய் லாமா அரசாங்க தலைமையில் இருந்து விலகியதற்கான முக்கிய காரணம். 2001-ம் ஆண்டில் இருந்தே, ஜனநாயகத்தை திபெத்தில் ஊக்குவித்தார் தலாய் லாமா.
அவர் ஒருவரை நம்பி திபெத் இருக்கக்கூடாது. திபெத்தினால் ஜனநாயக ரீதியாக செயல்பட முடியும் என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்று 2001-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை திபெத்தில் அரசாங்கம் நடத்த வைத்தார். ஆனால், அவர் தான் முக்கிய பொறுப்புகளில் இருந்தார்.
10 ஆண்டுகளுக்கு பின்னர், 2011-ம் ஆண்டு, அவர் முழு அரசாங்கப் பொறுப்பில் இருந்தும் விலகி கொண்டார். இதன் மூலம், அவர் திபெத் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். தனக்கு பின், திபெத் சீனாவின் பிடியில் சிக்கிக்கொள்ள கூடாது. தான் இல்லாமலேயே திபெத் இயங்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஆனால், சீனாவோ அடுத்த தலாய் லாமாவை தாங்கள் தேர்வு செய்து, திபெத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்று துடிக்கிறது.
தலாய் லாமாவின் பிறந்த நாளையொட்டி, அவர் அடுத்த தலாய் லாமா யார் என்பதை அறிவிப்பார் என்று பரவலாக நினைக்கப்பட்டது. ஆனால் அவர் நேற்று, ‘இன்னமும் 40 ஆண்டுகளுக்கு நான் உயிரோடு இருப்பேன் என்று நினைக்கிறேன். அடுத்த தலாய் லாமா யார் என்பதை முடிவு செய்யவில்லை’ என்று கூறியிருக்கிறார்.
ஆகையால், அடுத்த தலாய் லாமா யார்? அவரை திபெத்திய புத்த மதம் தேர்ந்தெடுக்குமா? சீனா தேர்ந்தெடுக்குமா? என்பது காலத்தில் கையில் தான் உள்ளது!