
சென்னையில் வசிக்கும் வாசுதேவனின் (சரத்குமார்) குடும்பம் அடிக்கடி வீடு மாறுகிறது. சொந்த வீடு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார் வாசுதேவன். மனைவி சாந்தி (தேவயானி) தன் பங்குக்கு கை கொடுக்கிறார். மகன் பிரபு (சித்தார்த்) பெரியவனாகி குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்கிற கனவில், பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள். அண்ணனுக்காக அரசுப் பள்ளியில் படிக்கிறார் தங்கை ஆர்த்தி (மீதா ரகுநாத்). ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழும் அந்தக் குடும்பத்தின் ஒரே கனவு சொந்த வீடு வாங்குவது. அது நிறைவேறியதா, இல்லையா என்பது கதை.
நடுத்தரக் குடும்பங்களுக்குச் சொந்த வீடு, பெரும் கனவு என்பதால், அனைவருடனும் எளிதாக ’கனெக்ட்’ ஆகிற கதைக் களம் இது. அதை முடிந்தவரை சுவாரஸியமாகத் திரைக்கதையாக்கி இருக்கிறார், இயக்குநர் கணேஷ். வெறுமனே வீடு வாங்கும் கனவை மட்டும் சொல்லாமல், அதற்காக ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு போராடுகிறார்கள் என்பதைப் பல இடங்களில் உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருப்பது பலம்.