
திருச்சியில், தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “கச்சத்தீவை விட்டு தர மாட்டேன் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கு உரியது. குறிப்பாக, தமிழக மக்களுக்கு உரியது. காலகாலமாக அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். இந்திய அரசு அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு தாரை வார்த்ததை நாம் அறிவோம். அது ஒரு வரலாற்றுப் பிழை. அதனை சீர் செய்ய வேண்டும். கச்சத்தீவை மீட்டு தர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்திய அரசு எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது.
இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழர்களுக்கு எதிரானது என்பதை விட, இந்திய தேசத்துக்கு விரோதமான கருத்து. அதற்குரிய விளக்கத்தை தர வேண்டும். தமிழக மக்களின் நீண்ட நாள் கலாசார உரிமையையும் மீட்டு தருவதற்கு ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.
அஜித்குமார் கொலை வழக்கு
அஜித்குமார் கொலையை பொறுத்தவரை முதல்வர் உடனே தலையிட்டு துணிச்சலான முடிவு எடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் தாயாரை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் இந்த கடும் துயரத்திற்கு சற்று ஆறுதலை தருகிறது. எதிர்க்கட்சி வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என அரசியல் அணுகுமுறையை கையாளுகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில், தி.மு.க எடுக்கிற நிலைப்பாடுகள் எல்லாவற்றிக்கும் அவர் இது போன்ற கருத்துக்களை சொல்லி வருகிறார். அது, அவருடைய பார்வை. அவருடைய அரசியல். அதனை நாம் விமர்சிக்க முடியாது.
தி.மு.க முன்னெடுக்கிற முயற்சிகள் பொதுவாக ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான உரிமையாக இருக்கிறபோது அதனை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது.
ஓரணியில் தமிழ்நாடு என்பது யாருக்கு எதிராக என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. தேசிய அளவிலான பார்வையுடன் கூடிய கருத்தாக நான் பார்க்கிறேன். கல்வித்துறை வழங்கக்கூடிய நிதியை கூட வழங்க மறுக்கிற பா.ஜ.க அரசை எதிர்க்க, அவர்களின் சனாதான செயல்திட்டத்தை முறியடிக்க, தமிழகத்தில் சங்பரிவார் அரசியல் எந்த வகையில் நுழையாமல் தடுக்க, அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஓர் அணியில் திரள வேண்டும்.
ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் விளக்கத்தை அளித்துள்ளார். நட்பின் அடிப்படையில் மரியாதை நிமித்தமாக தான் ராமதாஸை சந்தித்தேன். தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் புதிதாக கட்சி சேர்வதாக இருந்தால் அந்த முடிவை எடுக்கிற அதிகாரம் தமிழக முதல்வருக்கு தான் உண்டு என்பதை தெளிவுபடுத்திவிட்டார்.
அவர் தான் விடை சொல்ல வேண்டும்!
அப்பாவும், மகனும் ஒரு கட்டத்தில் ஒன்று சேருவார்கள் என நான் நம்புகிறேன். ஒரே பா.ம.க-வாக தான் தேர்தலை சந்திப்பார்கள்.
ஏற்கனவே, நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியுள்ளது. தாமதமாக எடப்பாடிக்கு ஒன்றிய அரசு வழங்கி உள்ளது என்றாலும்கூட அவர் பாதுகாப்புக்காக ஒன்றிய அரசு எடுத்து இருக்கிற இந்த நிலைப்பாட்டை எங்கள் கட்சி வரவேற்கிறது. அந்த கூட்டணியில் பெரிய கட்சி, அதிக வாக்கு எண்ணிக்கை உள்ள கட்சி அ.தி.மு.க தான். தேர்தலுக்குப் பின்பு தான் முதல்வரை தேர்ந்தெடுப்போம் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது என்றால் எடப்பாடி அவர்கள்தான் கருத்துச் சொல்ல வேண்டும். நான் கருத்து சொல்ல ஏதும் இல்லை.

தி.மு.க, பா.ஜ.க கொள்கை எதிரியான கட்சி என்று விஜய் கூறிவிட்டார். அ.தி.மு.க பற்றிய எதுவும் சொல்லவில்லை. விமர்சனமாக சில கருத்துக்கள் சொன்னாலும் கூட அ.தி.மு.க எதிரி தான் என அறுதியிட்டு அவர் கூறவில்லை. அங்கே தான் கேள்வி எழுகிறது.
தி.மு.க-வை ஆளுங்கட்சி என்ற முறையில் எதிர்க்கிறார். பா.ஜ.க-வை தமிழர்களுக்கு விரோதமான கட்சி என்று எதிர்க்கிறார். அ.தி.மு.க-வை தோழமை கட்சியாக பார்க்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அவர் தானே விடை சொல்ல வேண்டும்.
சிவசேனா குறித்து…
பா.ஜ.க தான் சிவசேனாவை உடைத்தது. அவர்கள் கட்டுக்கோப்பாக இயங்கி வந்தார்கள். மராட்டிய மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்கள். மாநில மொழி உரிமைக்காக குரல் கொடுத்தாலும் எந்த கட்சியாக இருந்தாலும் இரண்டாக, மூன்றாக உடைப்பது பா.ஜ.க-வின் அரசியல் தந்திரம். மாநில உரிமைகள் பேசுகிற கட்சிகளை வளரவிட மாட்டார்கள். அந்த அடிப்படையில் உடைத்தார்கள்.
காலம் தாழ்ந்தாலும் அதை உணர்ந்து ஒன்று சேர வேண்டும் என முன் வந்திருக்கிறார்கள் என்றால் நான் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்” என்றார்.