
புனித தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவை தவிர வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகின்றனர். இதையடுத்து பாம்பன் கடல் மீது கட்டப்பட்ட புதிய ரயில் பாலத்தினை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சுமார் 30 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை தவிர வட மாநில யாத்திரைகளின் வசதிக்காக தனியாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் ரயில்களின் மூலம் ராமேஸ்வரம் வரும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் ரயில்பெட்டி தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதன்படி ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகளை தங்கும் அறைகளாக மாற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு விட ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்கென 5 ரயில் பெட்டிகள் ஒதுக்கப்பட உள்ளன. இந்த ரயில் பெட்டிகளின் உட்புறங்களில் உரிய மாற்றங்கள் செய்து தங்கும் அறைகளாக மாற்றம் செய்து கொள்ள தனியாருக்கு வாய்ப்பு வழங்கப்படும். இதன் பின்னர் வரையறுக்கப்பட்ட கட்டணத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.
இந்த புதிய அனுபவத்திலான தங்கும் அறைகளை 5 ஆண்டுகள் நடத்துவதற்கான உரிமையினை பெறுவதற்கான டெண்டரினை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மின்னணு வாயிலாக இந்த ஒப்பந்த புள்ளியினை ஜூலை 15 அன்று மதியம் 12 மணிக்குள் சமர்பிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேல் விபரங்களை www.ireps.gov.in என்ற இணையதளம் மூலம் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.