
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நாளை (ஜூலை 7) கோவை மேட்டுப்பாளையத்தில் ‘புரட்சி தமிழரின் எழுச்சிப்பயணம் – மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.இதற்கான இலட்சினை மற்றும் பாடலை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூலை 7-ம் தேதி (நாளை) கோவையில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குகிறேன். 234 தொகுதிகளுக்கும் செல்ல உள்ளேன். எனது பயணத்தின் நோக்கம் திமுக ஆட்சியின் கொடுமையை அம்பலப்படுத்தி மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான். திமுக ஆட்சியில் சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து கூற உள்ளோம். ஸ்டாலின் ஆட்சியின் வேதனையை பட்டியலிட்டு, மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவோம். இச்சுற்றுப்பயணம் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். 2026 தேர்தலில் அதிமுக வென்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.