
சென்னை: “திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முறையான அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் அன்னதானம் செய்யலாம்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அதில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும், கோயில் கும்பாபிஷேகத்தை அனைத்து பகுதிகளிலும் காணும் வகையில் எல்இடி திரைகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட்டுள்ளன.