
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் ரஹ்மானை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கேரளாவில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28) கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து, 14 பேரை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகள் 6 பேர் தலைமறைவாக இருந்ததால் அவர்களை தேடி வந்தனர். கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள விமான நிலையத்தில் தலைமறைவாக இருந்த அப்துல் ரஹ்மானை கைது செய்தனர்.