
திருப்புவனம் / மதுரை: அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு வேலை அளித்துள்ளது கண்துடைப்பாகும். அவர் இருக்குமிடத்திலிருந்து 80 கி.மீ. தொலைவில் காரைக்குடியில் வேலை கொடுத்துள்ளனர் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய நயினார் நாகேந்திரன், ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள் நடந்துள்ளன. எஃப்ஐஆர் பதிவு செய்யாமல், அஜித்குமாரை காவல் நிலையத்தில் அடித்துள்ளனர். பின்னர் தனிப்படை போலீஸார் 2 நாட்கள் அவரைத் தாக்கியுள்ளனர். தலைமைச் செயலகத்திலிருந்து ஒரு அதிகாரி சொன்னார் என்பதற்காக 6 போலீஸார் சேர்ந்து அடித்துள்ளனர். 3 இடங்களில் சிகரெட்டால் சுட்டுள்ளனர்.