
சென்னை: பாமகவில் இருந்து அக்கட்சி எம்எல்ஏ இரா.அருள் நீக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வகிக்கும் கொறடா பதவியில் இருந்து மாற்றக்கோரி பேரவை தலைவரிடம் அன்புமணி சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக பாமக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ இரா.அருளை கட்சியின் இணை பொதுச்செயலாளராக ராமதாஸ் நியமித்தார். இதையடுத்து, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து இரா.அருளை நீக்கிய அன்புமணி, அந்த பொறுப்பில் க.சரவணன் என்பவரை நியமித்தார். தொடர்ந்து, இரா.அருளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார்.