
சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்துவிட்டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்னதாக கூறி, போலீஸார் தங்கள் வாகனத்தில் எடுத்து சென்றனர் என்று மதுரை மாவட்ட நீதிபதியிடம் அரசு மருத்துவர் சாட்சியம் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27). நகை திருட்டு புகார் தொடர்பான விசாரணையின்போது, தனிப்படை போலீஸார் தாக்கியதில் இவர் உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.