
சென்னை: திருவொற்றியூரில் உள்ள தாங்கல், பீர் பயில்வான் 2-வது தெருவைச் சேர்ந்தவர் நவ்பில் (17). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் பகுதியில் மழை பெய்தது. அப்போது, மாணவன் நவ்பில் டியூஷன் முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டுக்கு வெளியே சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் சேதமடைந்த மின்சார ஒயர் பட்டு மின்கசிவு ஏற்பட்டிருந்தது. அங்கு மாணவன் காலை வைத்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் மாணவன் நவ்பில் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது.