
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதியான இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
நகரத்தில் வீட்டிலேயே அடைபட்டிருக்கும் சிறுவன், ஒருநாள் தந்தையுடன் வெளியில் செல்ல வாய்ப்புகிடைக்கிறது. தந்தை – மகன் இருவரும் பைக்கில் ஒரு ரோட் ட்ரிப் பயணம் செல்லும்போது அவர்களுக்குள் என்னவெல்லாம் நடந்தது. மகன் அன்புவின் சேட்டைகள். அதனுள் இருக்கும் சுதந்திர குணம் என சுதந்திரத்தை விரும்பும் குழந்தை, தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்லுவதாக இதன் கதைக்களம் அமைந்திருக்கிறது. குழந்தையை வீட்டிலேயே அடைத்து வைத்திருக்கும் பெற்றோருக்கு அழுத்தமாக கருத்தை காமெடியாகச் சொல்லியிருக்கிறது இப்படம்.
ராம் – யுவன் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் முதலில் யுவன்தான் படம் முழுக்க இசை அமைக்க வேண்டியிருந்தது. ஆனால், யுவன் அந்த சமயத்தில் வேறு சில பெரிய படங்களில் பரபரப்பாக இருந்ததால், இப்படத்தின் பின்னணி இசையை மட்டும் அமைத்திருக்கிறார். பாடல்களை சந்தோஷ் தயாநிதி அமைத்திருக்கிறார்.
இதன் வெளியீட்டையொட்டி இன்று சென்னை கமலா திரையரங்கில் பறந்து போ படத்தின் FDFS காட்சிக்குப் பின் பேசியிருக்கும் ராம், “எல்லாரும் சிரிக்கிற மாதிரி படம் எடுத்திருக்கேன், யாரும் சிரிக்கலைனா என்ன பண்றதுனு பயம் இருந்துச்சு. ஆனால், படம் பார்த்தவர்கள் சிரிப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்குது. இதுக்கு முன்னாடி ரொம்ப சீரியஸான படம் எடுத்திருக்கேன். முதல்முறை என் படத்த பார்த்து சிரிச்சுட்டே வெளிய வர்றாங்க. அதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்குது.

‘மிர்ச்சி சிவா இந்தக் கதைக்குப் பொருத்தமானவர், இது அவருடைய படங்களில் முக்கியமான படம்’னு பாராட்டுவாங்கனு நினைக்கிறேன். அவர் அகில உலக சூப்பர் ஸ்டார்தான். குக்கிராமத்தில் படமெடுக்கும்போது சிவாவைப் பார்க்க 4000 பேர் வந்தாங்க. அந்த அளவிற்கு கிராமங்கள் வரை பிரபலமாகியிருக்கிறார். அவரது காமெடியும், எளிமையான பேச்சும் மக்களுக்குப் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தில் காமெடியோடு சேர்த்து நல்லாவும் நடித்திருக்கிறார். இப்படத்திலிருந்து நல்ல அப்பாவாகவும் அவரை இனி பிடிக்கும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.