வேலூர் மாநகராட்சியில், நிர்வாகச் சொதப்பல் காரணமாக பல்வேறு பணிகளில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் குவிந்திருக்கின்றன. இந்த நிலையில், மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று மதியம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்திலும் வழக்கம்போல் மேயர் சுஜாதாவுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர்கள் காரசாரமாக கேள்வியெழுப்பியதால் மேயர் சுஜாதா கடும் கோபமடைந்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்குள்ளும், வேலூர் மாநகராட்சியின் 17 வார்டுகள் வருகின்றன.
மாமன்றக் கூட்டத்தில் அமைச்சரின் தொகுதி குறித்துப் பேசிய மேயர் சுஜாதா, `பொதுச்செயலாளர் தொகுதிக்குத் தான் அதிகம் செய்திருக்கிறோம்’ எனக் கூறினார். அதாவது, கட்சி ரீதியான பதவியை மாமன்றக் கூட்டத்தில் சொல்லிப் பேசக்கூடாது என்பது மரபு. அமைச்சர் எனச் சொல்வதே வணக்கத்துக்குரிய மேயர் இருக்கையில் அமர்வதற்கான மாண்பு. சபை மரபை மீறிப் பேசிய மேயரிடம், அருகிலேயே அமர்ந்திருந்த புதிய கமிஷனரும், வேலூர் தொகுதியின் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வுமான கார்த்திகேயனும்கூட தவற்றைத் திருத்திக்கொள்ள அறிவுரை வழங்கவில்லை.
கூட்டத்தில், மூன்றாவது மண்டலக்குழுத் தலைவரான தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர் யூசுப் கான் பேசும்போது, “ஒன்னாவது மண்டலத்துக்கு மட்டும் 23 கோடி ரூபா ஒதுக்கீடு செஞ்சிருக்காங்க. எங்க மண்டலத்துக்கு ஒன்னுமே செய்யலை’’ என்று குற்றம்சாட்டியபோது, எதிரே அமர்ந்திருந்த எம்.எல்.ஏ கார்த்திகேயன் இடைமறித்து பேச்சை நிறுத்தச் செய்தார். அதைத்தொடர்ந்து பேசிய 12-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சரவணன், “மாநகராட்சியில் மொத்தம் நாலு மண்டலம் இருக்கு. இப்போ கொடுக்கப்பட்ட மாமன்ற கூட்டப்பொருள் தீர்மான நகல்ல எங்க முதல் மண்டலத்தையே காணலை’’ என்றார்.
உடனே கொதித்தெழுந்த மேயர் சுஜாதா, “நல்லா படிச்சுப் பாருப்பா. நான் படிச்சு சொல்லட்டுமா? ஒன்னாவது மண்டலத்துக்குத்தான் ரூ.187 கோடிக்கு பொருள் வச்சிருக்கோம். ஏதோ பேசணும்னு பேசக்கூடாது. பொதுச்செயலாளர் தொகுதிக்குத்தான் அதிகமா நிதி ஒதுக்கியிருக்கோம். உட்காருங்க..’’ என்றார். இதையடுத்து, அந்தக் கவுன்சிலரும் அமைதியாக அமர்ந்துக்கொண்டார்.
இதையடுத்து பேசிய 33-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ஷண்முகம், “என்னோட வார்டுல `கல்வெட்டு கட்டியிருக்கோம்’னு பொய் பேசுறாங்க. சாட்சி என்கிட்ட இருக்கு. எட்டு அடி கால்வாயில வெறும் ரெண்டு அடிக்கு பைப்பை போட்டு மூடியிருக்காங்க. அதுக்கு எப்படி அனுமதி வழங்கினாங்க. எப்படி இந்த சப்ஜெக்ட்டை தீர்மானத்துலயும் சேர்த்தாங்க. அதுக்கு அனுமதி கொடுக்கவே கூடாது. மழைக்காலம் வந்துடுச்சி. அடைப்பு ஏற்பட்டுச்சுனா துர்நாற்றம் அடிக்கும். வந்து ஆய்வு பண்ணுங்க. இல்லைனா, மக்களைக் கூட்டிக்கிட்டு வந்து ஆர்ப்பாட்டம் பண்ணுவேன்’’ என்றார் கொதிப்போடு. கவுன்சிலர் தகுந்த போட்டோ ஆதாரங்களையும் மன்றக் கூட்டத்தில் காட்டி சலசலப்பை ஏற்படுத்தியதால், 97-வது தீர்மானமாகச் சேர்க்கப்பட்ட இந்த விவகாரத்தை நிறைவேற்றாமல் தவிர்ப்பதாக அறிவித்தார் மேயர் சுஜாதா.
53-வது வார்டு பா.ம.க கவுன்சிலர் பாபி கதிரவன் பேசும்போது, “என் வார்டுல ஓட்டேரி ஏரி இருக்குது. அதுதான் மக்களோட வாழ்வாதாரம். அங்க இருக்கிற குப்பைக் கிடங்க அகற்றிக்கொடுங்க. ஓட்டேரி பூங்காவை நவீனப்படுத்தலைனாலும் பரவாயில்லை’’ என்றதும் மேயர் பதிலளிக்க முயன்றார். அப்போது, பா.ம.க கவுன்சிலர் பாபி கதிரவன் “அம்மா கோபப்படாம கேளுங்க. உங்களைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு. கொஞ்சம் கோவப்படாதீங்க. என்னோட கோரிக்கையைக் கேளுங்க. குறைச் சொல்லலை. பாத்ரூம் மெயின்டனன்ஸ் கேட்டா, மறுபடியும் புது பாத்ரூம் கட்டித்தரீங்க. ஏற்கெனவே பிரமாண்டமா 2 பாத்ரூம் இருக்கு’’ என்றார். இந்த முறை மன்றக் கூட்டத்தை அ.தி.மு.க கவுன்சிலர்கள் புறக்கணித்திருந்தனர். தி.மு.க கவுன்சிலர்கள் சிலரும் ஆப்சென்ட் ஆகியிருந்தார்கள். மெஜாரிட்டி கவுன்சிலர்கள் இல்லாமலேயே கூட்டப்பொருள் தீர்மானங்களை நிறைவேற்றியிருப்பதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
கவுன்சிலர்களின் கேள்விகளுக்கும், குமுறல்களுக்கும் வழக்கம்போல சரியான பதில்களும் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் மேயரும், அருகில் இருந்த எம்.எல்.ஏ-வும் கட்சிக் கூட்டத்தை நடத்துவதைபோன்றே மாமன்றக் கூட்டத்தையும் சரியாக 19 நிமிடங்களில் நடத்தி முடித்துவிட்டு, மன்றக் கூட்டம் நடைபெற்ற மைய அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்கள்.