
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. மகள் ரிதன்யா (27).
ரிதன்யாவுக்கும் திருப்பூர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணனின் மூத்த மகனான ஈஸ்வரமூர்த்தி-சித்திராதேவி தம்பதியின் மகன் கவின்குமார் (28) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தபின் அவிநாசியை அடுத்த பழங்கரையில் உள்ள கவின்குமார், ரிதன்யா தம்பதி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், சேயூர் அருகே மொண்டிபாளையம் செல்லும் வழியில் சாலையோரம் காருக்குள் விஷம் அருந்தி ரிதன்யா கடந்த ஜூலை மாதம் 28-ஆம் தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலைக்கு முன் கணவர் வீட்டில் சித்ரவதை செய்யப்பட்டது குறித்து ரிதன்யா தனது தந்தை அண்ணாதுரைக்கு அனுப்பிய ஆடியோக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சேயூர் போலீஸார் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரிதன்யாவின் மாமியாரான சித்ராதேவி உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரைக் கைது செய்யவில்லை எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கவின்குமார், தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த நிலையில், அதற்கு ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன், “எனது மகள் தற்கொலைக்கு முன் அனுப்பியிருந்த ஆடியோவில், தற்கொலைக்கு கவின்குமார், அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகிய மூவர்தான் காரணம் எனத் தெரிவித்திருந்தார். இருந்தாலும், போலீஸார் சித்ராதேவியை இதுவரை கைது செய்யவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சித்ராதேவி திடீரென தலைமறைவானார். இதையடுத்து, அவரை தற்போது சேவூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.