
சென்னை: விமர்சனங்களை பார்த்து கவலைப்படாமல் மக்கள் தேவையறிந்து செயல்படுவதே எனது பணி என்று திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ராஜா அண்ணாமலைபுரம், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், 32 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைகளை வழங்கினார்.
அப்போது முதல்வர் பேசியதாவது: திமுக ஆட்சியில் 3,177 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். 997 கோயில்களுக்கு சொந்தமான ரூ.7, 701 கோடி மதிப்பிலான, 7, 655.75 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம். 2,03,444ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பில் 26 ஆயிரம் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. 12,876 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.