
புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இது குறித்து சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அடுத்த தலாய் லாமா யார் என்பதை முடிவு செய்யும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பம் ஆகியவற்றின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவைப் பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும், நடைமுறையில் உள்ள மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.