
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘பீனிக்ஸ்’.
சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுள்ள இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், சம்பத், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
நாளை (ஜூலை 4) வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பிரஸ் ஷோ நேற்று நடந்தது. இந்நிகழ்வுக்கு நடிகர் விஜய் சேதுபதி வந்திருந்தார்.
இதற்கு முன்னர் பீனிக்ஸ் திரைப்பட பிரஸ் மீட் நிகழ்வில், சூர்யா சேதுபதி வாயில் பப்பல்கம் மென்றுக்கொண்டே பேசியது, சில இடங்களில் தடாலடியாக பதிலளித்தது என இந்தத் திரைப்பட அறிவிப்பு வந்ததிலிருந்து அவர் பல்வேறு வகையில் விமர்சனத்துக்குள்ளானார்.
இந்த நிலையில், அவர் ட்ரோல் செய்யப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்பட்ட வீடியோக்களுக்கு காபிரைட், ஸ்ட்ரைக் எனக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விவகாரமும் பேசு பொருளானது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது. என் மகன் மட்டுமல்ல இந்தப் படத்தில் நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படக்குழு சிறப்பாக வேலை செய்திருக்கிறது.
இந்தப் படம் வெளியாகுவதற்கு முன்பே ட்ரோல் செய்யப்பட்டது. இது பற்றி ஏற்கெனவே என் மகனிடம் பேசிவிட்டேன். இந்தத் துறைக்கு வரவேண்டுமென்றால், இப்படித்தான் முதலில் நடக்கும் அதை அப்படியே கடந்துவிட வேண்டும் எனக் கூறிவிட்டேன்.
அதனால்தான் நான் அவரின் எந்த விஷயத்திலும் தலையிடவில்லை. அவரே எல்லாவற்றையும் சமாளித்தார். என் மகன் உள்ளிட்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள். காபிரைட் போன்ற பிரச்சனைகள் எங்களிலிருந்து யாராவது ஒருவர் செய்திருப்பார். அதற்காக, என் மகன் சார்பில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கும் இயக்குநருக்கு நன்றி” என்றார்.