• July 3, 2025
  • NewsEditor
  • 0

கொரிய தமிழ்ச் சங்கமும், தேகு இந்தியன்ஸ் அமைப்பும் ஒருங்கிணைந்து தென்கொரியாவின் புசான் மாநகரில் ஜுன் 28 அன்று சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இச்சுற்றுலாவிற்கு, தேகு, போஹாங், புசான் ஆகிய பகுதியிலிருந்து இந்தியா மற்றும் கொரியாவைச் சேர்ந்த தமிழர்கள் 24 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

காலை வேளையில் சுற்றுலா பயணம், புசான் மாநகரின் காயா பகுதியில் அமைந்துள்ள `ஹொ ஹுவாங்-ஒக் (Heo Hwang-ok)’ என அழைக்கப்படும் செம்பவளம் அரசியின் நினைவிடத்திலிருந்து தொடங்கியது.

கொரிய-தமிழரசி செம்பவளத்தின் நினைவிடத்தின் முன்.

செம்பவள அரசி கி.பி 48-ல் பண்டைய தமிழ்நாட்டின் ஆய் சிற்றரசிடமிருந்து கடல்வழிப் பயணம் மேற்கொண்டு கொரியாவை வந்தடைந்து, மன்னர் கிம் சுரோவை மணந்து நல்லாட்சி புரிந்தார். தமிழ்ச் சொற்களும், தமிழர் கலாச்சாரமும் கொரிய மண்ணில் பரவக் காரணமாயிருந்த வரலாற்று நாயகி ஆவாள்.

சுற்றுலா சென்றவர்கள், `சம்குக் யுசா’ என்ற கொரிய புராதன வரலாற்று புத்தகத்தில் இடம் பெற்ற அரசியின் இந்த வரலாற்றைக் கேட்டறிந்தனர்.

கொரிய-தமிழரசி செம்பவளத்தின் மணல் மேடான கல்லறையின் முன்.

அத்துடன் அரசியின் மணல் மேடான கல்லறை (Royal Mound Tomb) மற்றும் அரசி தன்னுடன் கொண்டு வந்ததாகக் கருதப்படும் பகோடா (Pagoda) எனப்படும் கல் அடுக்கு ஆகியவற்றை சிலிர்ப்புடன் பார்வையிட்டனர்.

அருகாமையிலுள்ள குஜிபொங் (Gujibong) குன்றின் மேல் காணப்படும் கல்திட்டை (Dolmen) வகையைச் சார்ந்த பெருங்கல் (Megalith) மற்றும் கிமே தேசிய அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கலைப்பொருள்கள் அனைத்தும் பண்டைய கொரியாவின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவியதாக பயணக் குழுவினர் தெரிவித்தனர்.

கொரிய தமிழ்ச் சங்கத்துடன் நட்புறவில் இருந்துவரும் காயா கலாச்சார மையத்தின் தலைவரான புத்த துறவி `தோ மியொங்’ (Do Meyong) பயணிகளை நேரில் சந்தித்து ஆசி வழங்கியதோடு பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

அதன் பிறகு அருங்காட்சியக வளாகத்தின் அருகில் நிறுவப்பெற்ற இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சிலையை கொரிய மண்ணில் கண்ட சுற்றுலா குழுவினர் பூரித்துப் போனார்கள். நண்பகல் வேளையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

காலைப் பொழுதில் வரலாற்று அறிவியல் மற்றும் கலைத் தேடலுக்கு விருந்தளித்த சுற்றுலா, மாலை வேளையில் பாரம்பரியக் கிராமம், கடற்கரை, நீரூற்று ஒளி நிகழ்ச்சி என கண்கவர் காட்சிகள் அடங்கிய பயணமாக அவர்களுக்கு இருந்தது.

கம்ஜொன் பாரம்பரியக் கிராமத்தின் (Gamcheon cultural village) வண்ணமிகு வீடுகளை ஒன்றன்மேல் ஒன்றாக மலையில் அடுக்கி வைத்தாற்போல் கொண்ட தோற்றத்தை அவர்கள் அனைவரும் கண்டுகளித்து புகைப்படங்கள் எடுத்து கொண்டாடினர்.

அதன் பிறகு, ததேப்போ கடற்கரைக்குச் (Dadaepo beach) சென்றடைந்தவர்கள் மாலைக் கதிரவன் விடைபெறும் வரை சமதளமான, தெளிவான கடற்கரைப் பரப்பில் கால்களால் நீருடன் உறவாடி மகிழ்ந்தார்கள்.

இரவு 8 மணியளவில் நடைபெற்ற நீரூற்று ஒளி நிகழ்ச்சியைக் கண்ட மனநிறைவுடன், அனைவரும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு விடைபெற்றார்கள்.

காயா பகுதியில் நிறுவப்பெற்றுள்ள மகாத்மா காந்தியின் சிலையின் முன்.

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் அரவிந்த ராஜா இந்நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்து கூறுகையில், “இந்த சுற்றுலா தமிழ் அரசியின் பெருமைமிகு வரலாற்றை நேரில் கண்டு அறிந்துகொள்வதற்கு நல்லதொரு வாய்ப்பை கொடுத்தது.

சுற்றுலா சிறக்க உதவிபுரிந்த சங்கத்தின் ஆளுமைகள் அனைவருக்கும், குறிப்பாக, முனைவர் செலஸ்டின் ராஜா, சம்பத் குமார், மணிகண்டன், முனைவர் முத்துச்சாமி, பொறியாளர் ஆனந்த் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரிய தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து சுற்றுலா ஏற்பாட்டிற்கு உறுதுணையாகச்  செயல்பட்ட தேகு இந்தியன்ஸ் அமைப்பிற்கும், அதன் தலைவர் முனைவர் வாசுதேவ் அவர்களுக்கும் நன்றியைத் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்பார்வை செய்த முனைவர் பழனியாண்டி, அறுசுவை உணவுடன் தேநீர் விருந்தும் படைத்த முனைவர் தீபன் -பிரேமினி தம்பதியினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *