
சென்னை: விசாரணையின்போது கோயில் காவலர் உயிரிழந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: இது முழுக்க முழுக்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை. அவரது ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனிதஉரிமை மீறல். இதை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும். பதில் சொல்ல வேண்டிய முதல்வர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார். சிபிசிஐடி விசாரணை மீது துளி கூட நம்பிக்கையில்லை. அவரது தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தமிழக மக்கள் தவிக்கின்றனர்.