
திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச் செயலாளராக பதவி உயர்வுபெற்றுவிட்டாலும் சொந்த மாவட்டமான திருச்சி அரசியலை இன்னமும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பவர் நேரு. ஆனால், அவரின்றி திருச்சி திமுக-வில் எதுவும் அத்தனை எளிதில் அசைந்துவிடாது என்று தெரிந்தும் மாவட்ட திமுக எம்எல்ஏ-க்கள் இருவர் நேருவுக்கு எதிராக தங்களது மனக்குமுறலை பொதுவெளியில் பகிரங்கமாக போட்டுடைத்து வருகிறார்கள்.
நேருவின் சொந்த ஊரை உள்ளடக்கிய லால்குடி தொகுதிக்கு எம்எல் ஏ-வாக இருக்கும் சவுந்தரபாண்டியன், “எனது தொகுதிக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கூட அதிகாரிகள் என்னை அழைக்கப் பயப்படுகிறார்கள். அதற்குக் காரணம் அமைச்சர் நேரு” என முகநூலில் முன்பு ஆதங்கப்பட்டார். இந்தப் பஞ்சாயத்து அறிவாலயம் வரைக்கும் போய் சமாதானம் செய்துவைக்கப்பட்ட பிறகும் சவுந்தரபாண்டியன் – நேரு சச்சரவுகள் முடிவுக்கு வந்தபாடில்லை.