
தீபாவளி, பொங்கல் என்றால் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்துவார்கள். அதுவும் ஆளும் கட்சியாக இருந்துவிட்டால் இந்தக் ‘கவனிப்பு’ கொஞ்சம் தாராளமாகவே இருக்கும். ஆனால், இப்போது தீபாவளியும் இல்லை… பொங்கலும் இல்லை. ஆனலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி அத்தனை பேருக்கும் ரூபாய் ஐயாயிரத்தில் தொடங்கி அன்பளிப்புகளை தந்து அசத்திக் கொண்டிருக்கிறார் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அண்ணாச்சி.
2021 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வாக்குப் பதிவுக்கு சில தினங்களுக்கு முன்னதாக திடீரென காலமான நிலையில், அந்தத் தொகுதியை அதிமுக கைப்பற்றியது. இந்தத் தொகுதியில் அதிமுக வென்றது அண்ணாச்சியின் அரசியல் சாணக்கியத்துக்கே சவாலாக அமைந்தது.