
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவரின் மகள் பிருந்தா. இவர் காளையார்கோயில் அருகே ஆண்டிச்சியூரணியில் உள்ள புனித பெனடிக் பெண்கள் விடுதியில் தங்கி சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை விடுதி வளாகத்திலுள்ள வேப்பமரத்தில் சால்வையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார் பிருந்தா. இதைப் பார்த்த சக மாணவிகள் பதறியுள்ளனர். உடனே விடுதி நிர்வாகி காவல்துறையினருக்கு தகவல் சொல்ல, உடல் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடற்கூறாய்வு நடந்த நிலையில், ‘பிருந்தாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது, விடுதி நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும்’ என்று வலியுறுத்தி மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.
பின்பு காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, மர்ம மரண வழக்காக மாற்றி பதிவு செய்ததாக தெரிவித்தனர். பின்பு அமைச்சர் பெரியருப்பன் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டத்தை நிறுத்திக் கொண்ட உறவினர்கள், பிருந்தாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் லாக்கப் மரணம், சிங்கம்புணரி தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம், தற்போது தனியார் விடுதி 9 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் என… துயரச் செய்திகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.