
சென்னை: மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, வருகிற 3 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ளது.