
தருமபுரி: தன் எதிரிகளை சிதைக்க வேண்டும் என்பதற்காக, வலிமையாக உள்ள பாமக-வை சிதைக்கும் நோக்கத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது என தருமபுரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தருமபுரியில் இன்று (ஜூலை 1-ம் தேதி) தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஷ்வரன் தலைமையில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தினர். அப்போது பேசிய எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், ‘சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்து அவதூறான சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. பாமக தலைமையில் அண்மைக் காலமாக நிலவும் குழப்பமான சூழலை பயன்படுத்தி அருள் எம்எல்ஏ சுய லாபத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது இன்றைய வளர்ச்சியும், அடையாளமும் பாமக கொடுத்தது என்பதை மறந்து விட்டு செயல்படுகிறார்’ என்றார்.