
புதுச்சேரி: புதுச்சேரியில் ஜூலை 9-ம் தேதியில் தொழிற்சங்கங்கள் கூட்டாக பந்த், 8 இடங்களில் மறியல் போராட்டங்களை அறிவித்துள்ளனர். அன்றைய தினம் பேருந்து, ஆட்டோ இயங்காது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி முதலியார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் தொழிற்சங்கத்தினர் கூட்டாக செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். இச்சந்திப்பில் ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேது செல்வம் கூறியதாவது: தொழிலாளர்கள், விவசாயிகள், மக்கள் விரோத மத்திய மோடி அரசை கண்டித்தும், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் ஜூலை 9ம் தேதி புதுச்சேரியில் வேலை நிறுத்தம் பந்த் நடத்துகிறோம். அன்றைய தினம் தொழிற்சங்கங்கள் கூட்டாக புதிய பேருந்து நிலையம், அரியாங்குப்பம், வில்லியனூர், பாகூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், சேதராப்பட்டு, காரைக்கால் ஆகிய 8 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தவுள்ளோம்.